Monday, January 19, 2009

இதுவும் காதலே!

நின்று நிதானித்திறங்கும்
உயர இலை நீர்த்துளியாய்
கிளறியெடுத்துத் தெளிக்கிறாய் வார்த்தைகளை

நிலவொளிக் கூரை மண்ணெண்ணைத் திரியாய்
திடுமென செவியறைந்துச் செல்லும்
மேகத்திலினூடான பேரிடியாய்
எதிர் புதிராய் இணைந்த படியிருக்கும்
ஈராவேஷர்களின் வாளொலிகளாய்
இரண்டாம் வகுப்பாசிரியரின்
தெளிந்த உச்சரிப்பின் க ங ச வாய்
ஒவ்வொரு வார்த்தையையும் ஒற்றை நூலில்
இறுகக் கட்டி கோர்த்தெடுத்து விடுமளவில்
தேர்ந்த மற்றும் தெளிந்த உச்சரிப்புகள் உன்னிடம்

உச்ச நெருப்பில் கிடந்து தூயும் தங்கமாய்
உன் நாச் சுவர்களில் பொசுங்கி
மோச்சம் பெற்றதாய் மகிழ்ந்து குதிக்கின்றன
உன் கோபக் கணல் வார்த்தைகள் கூட

இருக்குமழகை இன்னுமேற்றும்
அழகு மங்கை அழகாபரணமாய்
பழமெடுத்து பாலில் சேர்க்கிறது
வார்த்தைகளுக்கபிநயமிடும் உன் விரலாடல்கள்

தாளம் மாறா உன் நாவோசையுடன்
சுருதி சேர்த்திசைக்கிறது காற்றும் கூட

படாரென்ற புறக்கணிப்பின் உன் முதுகுத் தோற்றமும்
என்மீதான எல்லாருடைய ஏறஇறங்கப் பார்வைகளும்
நீண்டநேரங்கழித்தே எனக்குணர்த்தியது
வெகு நேரம் முதற்கொண்டே
நீ என்னை திட்டிக் கொண்டிருந்தாயாமென்று.